×

அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது விவகாரம்: டிஜிபி மற்றும் பொன்.மாணிக்கவேலுவுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்ட வழக்கில் டிஜிபி மற்றும் பொன்.மாணிக்கவேலுவுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழமைவாய்ந்த சோமாஸ்கந்தர் சிலை உள்ளது. இந்த சிலை சேதமடைந்துவிட்டதாகக் கூறி அறநிலையத்துறை மூலம் புதிய சிலை செய்யப்பட்டது. இதையடுத்து, புதிய சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, சிலை செய்த மாசிலாமணி, கோயில் செயல் அலுவலர் முருகேசன் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன்பின்னர், இந்த வழக்கின் விசாரணை சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வசம் சென்றது. அப்போதைய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தார். இதையடுத்து, இந்த மோசடியில் மற்றவர்களுக்கு தொடர்புள்ளதா என பல கோணங்களில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் ஆணையர் வீரசண்முகமணியை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 15ம் தேதி கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து தனக்கு ஜாமின் கோரி வீரசண்முகமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, விளம்பரத்திற்காக கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதா? என காட்டமாக கேள்வி எழுப்பிய நீதிமன்றம், முறையாக விசாரணை நடத்தாமல் கைது நடவடிக்கை மேற்கொள்வதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கண்டனம் தெரிவித்தது. அத்துடன், வீரசண்முகமணிக்கு ஜாமின் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், கைது நடவடிக்கையில் மனித உரிமை மீறல் இருந்ததாக வீரசண்முகமணி மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தெடர்ந்தார்.

இதையடுத்து, டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுவுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், வீரசண்முகமணியை கைது செய்யும்போது, உச்சநீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் வகுத்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்றும், வீரசண்முகமணியின் நற்பெயரை குலைக்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்தா? என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commissioner for Human Rights Commission ,Ponnu Manikavelu , Charity department, Veerasanmukamani, DGP, Pon.Manikavel, Human Rights Commission
× RELATED பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த...